நடிகர் சிவக்குமாரும் முகநூலும்



 


திரையில் மின்னும் நட்சத்திரங்கள் வாழ்வின் எதார்தத்தின் சூட்டை தாங்க முடியாது போலிருக்கிறது .
லைட் ஆன் கேமரா ஸ்டார்ட் கட் ,  மறுபடி
லைட் ஆன் கேமரா ஸ்டார்ட் கட் ,
அரிதாரம் , எழுதி கொடுக்கப்பட்ட வசனங்கள் , ஜிகினா உடைகள் என்று கனவுலகம் அது.
ஒரு முறை பேசினால் திரும்ப வாங்க முடியாது , சாதியால் துண்டாடப்பட்டு , சாதியால் ரெண்டாகி நாலாகி பலவாகி பலநூறாகி போன நிதர்சனத்தை நேரில் சந்திக்கவும் அதில் சீர்திருத்தம் செய்யவும் பேசவும் ரொம்ப துணிச்சலும் வேண்டும் கொஞ்சம் நேர்மையும் வேண்டும்.

நாறி போன சினிமாவில் நான் மட்டுமே யோக்கியன் என்னும் ஒழுக்க சர்டிபிகேட் மட்டுமே போதாது.
மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து , தமது வாழ்க்கையை கொடுத்து நீங்கள் வெறுமனே முகநூலில் பேசிவரும் விசயத்துக்காக தமது வாழ்க்கையே தொலைத்தவர்கள் இருக்கிறார்கள் என்பதை சினிமா கதாநாயகர்கள உணரவேண்டும்.

காதலோ , காமமோ எதுவாகிலும் அது சினிமாவில் காட்டப்படுவதை போலஎதார்த்தில் இருப்பதில்லை .
ஆண்டாண்டுகாலமாக சாதிய அடக்குமுறைகளையும் அதை தாங்கி பிடிக்கும் சமூக கருத்துக்களையும் அதை எதிர்க்கும் கருத்துக்களையும் கொண்டோர்  உக்கிரமாக மோதிகொள்ளும் இடமே முகநூல் என்பது.
நானும் எனது குடும்பமும் மிக சிறிய வட்டம் என்னால் சண்டை வேண்டாம் என நீங்கள் விலகுவது,எதோ நீங்கள் வந்து சண்டையை உருவாக்கியதை போன்ற பிரமையை ஏற்படுத்துகிறது.

2011 ல் ஒரு புத்தக விழாவில் நானும் உங்களை பார்த்தேன் உங்கள் மகன் கார்த்திக்குடன் வந்திருந்தீர்கள் போட்டி போட்டுகொண்டு ஒரு கூட்டம் கையெழுத்தை வாங்கி கொண்டு இருந்தது .
பலர் உங்களை கொண்டாடலாம் , புகழ்ந்து பேசலாம் எல்லாம் நீங்கள் ஒரு சினிமா பிரபலம் என்பதற்காக வெறும் சொல்லாடல் அது.
ஆனால் சாதி போன்ற விசயங்களில் இருந்து அதன் மோதல்கள் என்பது தனிபட்ட வரலாறு கொண்டது .
நீங்கள் பேசினால் செயலில் என்ன செய்திருக்கிறீர்கள் என கேட்க இங்கே ஆட்கள் இருக்கிறார்கள் எழுதினால் விமர்சிக்க ஆட்கள் இருக்கிறார்கள்
இதனால்தான் சினிமா பிரபலங்களுக்கு இந்த முகநூல் டிவிட்டர் எல்லாம் அலர்ஜியை தருகிறது .

எதிர்த்து கேட்கவே ஆட்கள் இல்லாத இடத்தில் தான் பேசுவது வரலாற்றின் உண்மை என கைதட்டல் வாங்க கூடிய இடத்தில் பேசுவது எவ்வளவு எளியது மிஸ்டர் சிவகுமார்.

இதே போலத்தான் சின்மயி அவர்களும் சாதி பற்றி பேசினார்கள் கேள்வி கேட்டோம் உடனே பேச்சை முறித்து கொண்டார்கள் .
இணையம் கட்டற்ற சுதந்திரம் கொண்டது .
அது போலத்தான் ஒரு இடதுசாரி ? இணையதளம் ஒரு பெண்ணிடம்
ஆணுறுப்பை கவிதையில் எழுதியதற்காக அதன் வகைமாதிரி என்னவென கேட்டது .
இணையத்தில் தாழிச்சி எடுத்துவிட்டார்கள்
பிறகு பதிவர்களை பற்றி எழுதாமல் பொத்தி கொண்டு இருக்கிறது அந்த இணையம் .
முகத்தில் அடிக்கும் கேள்விகளை நீங்கள் எதிர்கொள்ளவும் , திருப்பி பேசவும் தைரியம் இல்லாவிடில்
சினிமாவில் நடித்தவர்களை முதல்வர்களாக்கி பார்த்திருக்கலாம் ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் ஆனால் அது நடக்காது இனிமேல் .
படிக்காத ஒரு தலைமுறை வாழ்வு முடிந்து விட்டது.
எனவே இங்கே எல்லா கருத்துக்கள் மீதும் கேள்விகள் எழத்தான் செய்யும்
புனிதம் புகழ் இதற்கெல்லாம் கேள்விகள் பயப்படாது.
ஏன் என்று கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
என்பதும் ஒரு சினிமா பாட்டுதானே ?
ஒரு முக்கிய விசயம் என்னவென்றால்,

நான் புகழ்பெற்றவர்கள் கருத்து சொல்ல கூடாதுன்னோ சினிமா காரர்களின் கருத்து பத்தாம் பசலிதனமானதுன்னோ சொல்லவில்லை.
கருத்து என்பது எது எப்படி பட்டதாக இருந்தாலும் விமர்சனத்துக்கு உரியதே
மார்க்ஸ் காலத்திலேயே மார்க்சின் தத்துவங்களை டூரிங் என்பவர் மறுத்திருப்பார் அவருக்கு பதில் சொல்லும் முகமாக அமைந்த மிக அருமையான நூல் ஒன்று கிடைத்தது எங்கெல்சின் டூரிங்குக்கு மறுப்பு எனும் நூல்.
ஆக விமர்சனத்தின் எனது குடும்பத்தினர் வருகிறார்கள் அவர்களுக்கு இது தேவையா என கேள்வி நீங்கள் கேட்கலாம் ஆனால் பாருங்கள் , நீங்கள் சாதி ஒழிப்பு அல்லது சாதி மீதான எதிர்ப்பை பற்றி குறிப்பிடும் போது ஜோதிகா –சூரியா கல்யாணத்துக்கு நீங்கள் சொன்ன எதிர்ப்பு சாதி ஆதரவு ரீதியாகவே பொதுவாக உணரப்படும் இல்லையா?
அதற்கு உங்களிடம் மறுப்பு இருக்கலாம் ஆனால் தனிமனிதன் நான் எனது குடும்பம் சிறியது என சொல்லி விலக கூடாது.
யாரும் இங்கே தனிநபரல்ல
நிறைய தனிநபர்கள் சேர்ந்துதான் சமூகம் உருவாகி இருக்கிறது
சமூகத்தின் சில கருத்துக்களை நீங்கள் கடைபிடிக்கிறீர்கள் என்றால் ஆனால் அதற்கு எதிராக நீங்கள் முகநூலில் பேசுகிறீர்கள் எனும்போது விமர்சனங்களும் கேள்விகளும் வரத்தானே செய்யும்.
என்னோடு விவாதம் செய்த அந்த பாடகிக்கு ஒவ்வொரு கணமும் அவரோடு
பேச நான் தகுதியானவன் அல்ல என்கிற கெளரவம் இருந்தே வந்தது என நம்புகிறேன்.
உங்கள் புகழ் கவுரவம் ஆகியவை விவாதத்தில் மிகப்பெரிய மனதடையான விசயங்களாகும் .
எந்த புகழும் இல்லாதா யாரோ ஒரு முகநூல் அக்கவுண்டு காரர் உங்களின்
சாதி அபிமானம் குறித்த கேள்வி எழுப்பலாம் . அதான் இணையம் .
ஆகவே , உங்கள் மூலம் அனைத்து புகழ் மிக்கவர்களுக்கு இதான் பதில்
இங்கே அனைத்து கருத்துக்களும் பிரித்து மேயப்படும் , முடிந்தால் உங்கள் கருத்தை விளக்குங்கள் என்பதுதான்.

நீங்கள் தீரன் சின்னமலையை பற்றி எழுதினீர்களாமே?

இங்கே அவர்கள் எல்லாம் சாதி தலைவர்கள் என்பது தெரியாமல் என்னமோ போங்க 
தீரன் சின்னமலை - கொங்கு கவுண்டர்களின் அடையாளமாக்கிட்டாங்க 
இம்மானுவேல்- தாழ்த்தபட்ட பிற்படுத்தபட்ட மக்களின் தலைவன்   
அம்பேத்கர் - தாழ்த்தபட்ட மக்களின் தலைவர் 
மருது பாண்டியர்கள் - தேவர்களின் ஒரு பிரிவினரின் தலைவராக்கிட்டாங்க 
பாரதியை - பார்பனர் என சொல்லி ஒதுக்கியாச்சு
முத்துராமலிங்க தேவர் - தேவர் சமூகத்தின் தலைவராக்கியாச்சு 
காமராசர் - நாடார் சாதிகாரர் ஆக்கியாச்சு 
ஈ வேரா - பெரியார் - நாயுடு களின் தலைவர் என்றும் கூட சொல்கிறார்கள் ஒரு பிரிவின திருமலை நாயக்கரை தமது தேசிய நாயகனாக கொண்டிருக்கிறார்கள் 

தற்போது சாதி மோதல்களுக்கு தலைவர்களின் பெயர்கள் தாம் காரணம் 
என்பது தாங்கள் அறிந்து எழுதினீர்களா அறியாமல் எழுதினீர்களான்னு புரியலை.

மேற்கண்டவர்கள் தவிர இன்னும் நிறைய பேர் இருக்காங்க 
மேற்கண்ட தலைவர்கள் தம் வாழ்நாளில் கூட தனது சாதியை உயர்வாகவும் மற்ற சாதியை தாழ்வாகவும் நினைத்திருக்க மாட்டார்கள் என்பதெல்லாம் சப்ஜெட்டுக்குள் வராது .


திரு.சிவகுமார் அவர்கள் வரைந்த ஓவியம் 
 

செய்தி: 

சென்னை: சிலர் சாதி பற்றிய கருத்து பரிமாற்றத்தை முன்வைத்ததால்,  முகநூலில் (ஃபேஸ் புக்) இருந்து விலகுவதாக நடிகர் சிவகுமார் அறிவித்துள்ளார்.

நடிகர் சிவகுமார், தனது முகநூலில் தந்தை பெரியார், ஜான்சி ராணி, வேலுநாச்சியார், முத்துவடுகநாதன், எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், எம்.ஆர்.ராதா ஆகியோரை பற்றி தொடர்ந்து எழுதி வந்தார்.
இதை தொடர்ந்து தீரன் சின்னமலை பற்றி சமீபத்தில் அவர் எழுதினார். இதைத் தொடர்ந்து, அவரது முகநூலில் சாதி பற்றிய கருத்துக்களை சிலர் பரிமாறியதோடு நிற்காமல், ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் வகையிலான வார்த்தைகளையும் வெளியிட்டார்கள். இதைத் தொடர்ந்து, முகநூல் கணக்கில் இருந்து நடிகர் சிவகுமார் விலகிக்கொள்வதாக தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது முகநூலில், ''என்னை மனிதப் புனிதன் என்றோ, வழிகாட்டும் தலைவன் என்றோ, வாரி வழங்கும் வள்ளல் என்றோ, பேரறிவாளன் என்றோ, நடிப்புக்கலை, ஓவியக் கலையில் கரை கண்டவன் என்றோ, பெரிய சாதனையாளன் என்றோ நினைத்துக் கொண்டு நான் முகநூலில் பதிவிடவில்லை. 70 வயதைத் தாண்டி, முடிந்தவரை நேர்மையாக, இந்த மண்ணில் வாழ்ந்து பெற்ற அனுபவங்களை தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்ளவே எழுதி வந்தேன்.

இது சிலருக்குள் உறங்கிக் கொண்டிருந்த வன்மத்தை, சாதி வெறியை வளர்த்துக்கொள்ள காரணமாக இருக்கிறது என்று அறிந்து வருந்துகிறேன். தனிப்பட்ட முறையில் என்னை தாக்கவும், குடும்பத்தினரை குறைகூறவும், நானே களம் அமைத்துக்கொடுத்ததாக உணர்கிறேன். என் உலகம் சிறியது. அதில் என் வாழ்க்கை மிகவும் எளிமையானது. இது உங்கள் உலகம், உங்கள் சுதந்திரம். நீங்கள் நினைத்தபடி வாழுங்கள். எல்லாரும் இன்புற்றிருக்கவே இத்துடன் என் முகநூல் பதிவுகளை நிறைவு செய்கிறேன்" என்று குறிப்பிட்டு உள்ளார்.







6 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post