இணையம் முழுவதும் விரவிக்கிடக்கும் வாய்க்கா தகராறு



இணையம் முழுவதும் விரவிக்கிடக்கும் வாய்க்கா தகராறு
-----------------------------------------------------------------------------

இணையத்தில் தமிழ் படைப்பாளிகளெழுத ஆரம்பித்த காலத்தில் இருந்து தமிழ் உலகமே உய்யப் போகிறதென அகமகிழ்தனர் இணையத்தை வாசிக்கும் சான்றோர் இணையத்தின் மூலம்தமிழ் சமூகத்துக்கு ஏதேனும் செய்ய ஆவலுற்றனர் தமிழ் அறிஞர் தகைசான்றோர் பிளாக்குகளைஅனைவருக்கும் பரப்பிக்கவும் படிப்பிக்கவும் ஆர்வமுற்றனர் .

ஆனால் சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும் அகப்பேய் ஆட்டும் போது ஆழ்துயில் மனிதன் வீற்றிருக்க இயலுமா? என அய்யமுறும் படி ஆட்டம் ஆரம்பம் ஆனது .

இதுவென்னவென அறிய முயலும் நண்பர்களே அதுதான் ஆரிய -திராவிடப் போர் எனக் கிளப்பி விடப்பட்டு ஏற்கனவே இங்கு எழுதபடிக்கத் தெரிந்தவர்கள் நடத்திவந்த போர்தான் அது .

ஆரியர்கள் என்பவர்கள் பூர்வ ஆரியர்கள் இந்தியாவில் வந்தது போலவே தற்போதும் இருக்கிறார்கள் என்பது போலவும், திராவிடர்கள் என்பார் அதேபோன்று பூர்வகுடிகளாக இருக்கிறார் என்பதாகவும் கற்பனை செய்து கொண்டார்கள் .

ஆனால் ஆரியர்கள் இந்தியாவில் நுழைந்தது இன்றைக்கு இருந்து மூன்று நாட்களுக்கு முன்போ மூன்று நூறு ஆண்டுகளுக்கு முன்போ அல்லவென்பதும் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வந்தவர்கள் தற்போது பார்பனர்களாக இருக்கிறார்கள் என்ற ஆய்வுரை ஓரளவுக்கேதான் உண்மையாக இருக்கவியலும்.

பார்பனர்களை வந்தேறிகள் என்றும் அவர்கள் வகுத்தளித்த வேதம் முதல் சாதிவரையிலான முறைமைகளுக்கு அவர்களே பொறுப்பு என்பதாகவும் சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் பார்பனர்களின் தலைமை அவர்களின் பண்பாட்டு ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்றும் மொட்டையடியாக இயம்பலாயினர் .

தற்போது அதைக்காட்டிலும் குறுகிய வரையறையாகத் தமிழ் மட்டுமே தொல்குடி மூத்தகுடிமக்கள் என்றும் ஆரிய வந்தேறிகள் என்றும் இன்னும் சின்ன வட்டத்திற்கு வந்து சேர்ந்துவிட்டார்கள்.

நாம் முக்கியச் சங்கதிக்கு வருவோம் இந்த இனவேறுபாட்டு சண்டையை இணையத்தில் நிகழ்த்தி நிகழ்த்தி சோர்வடைகிறார்கள் நமது தம்பிமார் .

உலகத்தில் நிகழும் விசயங்களை அறிந்துகொள்ளவும் அதைப் பகிர்ந்து கொள்ளவும் கிடைத்த அளப்பரிய வாய்ப்பை பழைய சண்டைகளில் மூழ்கி மறந்து போய்விட்டார்கள் என்றே கருதுகிறேன் .

மேற்கண்ட சண்டையைத் தற்போது பார்பன நண்பர்களும் வரிந்து கட்டி கொண்டு நடத்துகிறார்கள் தாங்களும் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்பதாய் அவர்களது பதில்களும் முரண்களும் இருக்கின்றது .


முக்கியக் காரணமாய்ச் சாதி இருப்பது:
-----------------------------------------------
அனைத்து சண்டைகளுக்கும் சாதிய படிமானங்களே முக்கியக் காரணமாய் இருக்கிறது என்கிற விசயத்தை நாம் அறியும் போது அதை இணையத்தில் பேசி பேசி தீர்ப்பதற்கு எண்ணற்ற விவாதங்களை
துவக்குகிறார்கள் இது இணையத்தில் கிடைக்கும் அனைத்து சந்து பொந்துகளில் நடத்தி கொண்டிருக்கிறார்கள்

இதன் மூலம் இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற ஆச்சரியமே மேலோங்குகிறது .

மேற்கண்டதுபோல ஆரிய திராவிடச் சர்ச்சையோ , பார்பனர் ஆதிக்கம் ஆகியவை பொருளற்றவை என்றோ நான்
பகரவருவதாக நீங்கள் எடுத்துகொள்ளலாகாது .ஆனால் ஒரு முக்கியமான விசயத்தைக் கருத்தில் கொள்ளாமல் இயங்கிய சாதிய எதிர்ப்பாளர்களை
போலவே இவர்கள் இயங்குவதைத்தான் நான் பரிசீலிக்க இந்தக் கட்டுரை எழுதி கொண்டிருக்கிறேன் சமூகத்தின் மேல்கட்டுமான சாதி அமர்ந்திருக்கும் அடிக்கட்டுமானத்தைப் பற்றி .

ஆதியில் சாதி அமைப்பு என்கிற விசயத்தைப் பார்பனர்கள் சமூகத்தின் பார்வைக்குக் கொண்டு வந்தவுடன் அனைவரும் ஏற்றுகொண்டது போலவும் இதெல்லாம் உடனே இன்ஸ்டண்டு காபியை போன்று நடந்து
விட்டதாகவும் எழுதியும் பேசியும் விடவது மிக எளிதானது அது காலையில்
எழுந்தவுடன் பல்விளக்குவதற்கு எடுக்கும் முயற்சி அளவு முயற்சி போதுமானதாகும்.

ஆனால் விசயம் அப்படி இல்லை சமூகத்தின் நிலபிரபுத்துவ (அனேகம் நிலங்களைக் கையில் வைத்திருப்பவருக்கு அடிமையாகவோ அல்லது சொந்தமாக நிலம் வைத்திருந்தாலும் ஆண்டைக்கு
கட்டுபட்டவரகவோ பெரும்பான்மை மக்கள் வசிக்கும் முறை)
உற்பத்திக்கு இந்தச் சாதிபடிநிலை அமைப்பு உதவி இருக்கிறது .

இதையெல்லாம் இணையத்தில் எடுத்து சொல்ல கம்யூனிஸ்டுகளும் இல்லை ஏனெனில் இணையக் கம்யூனிஸ்டுகள் சாதி என்பது அடிக்கட்டுமானமாக இருக்கிறது என்கிற மயக்கத்தில் இருக்கிறார்கள் . குருடன் யானையைப் பார்த்த கதையாகப் போய்விட்டது இவர்கள் அனைவரும் சமூகத்தின் வாழ்நிலையைப் பற்றிய பகுப்பாய்வு செய்வது.

எந்தத் தனிநபரோ அல்லது குழுவோ சாதிமுறையைப் புகுத்தி விடவும் இல்லை அல்லது எந்தத் தலைவரோ போராட்டமோ சாதியை இல்லாமல் செய்துவிடவும் முடியாது என்பதைத் தலையில் அடிச்சாப்பல சொல்ல யாருமில்லை இங்கு.

சாதியை அதன் வரலாற்று கட்டத்துக்குள் ஆராய்ந்து அதன் முடிவு எப்படி இருக்கும் என்பதை ஆராய்ந்தோமானால் அது நிலபிரபுத்துவக் கட்டத்தில் உற்பத்தி வசதிக்காக வந்தது ஏனெனில் குறிப்பிட்ட சில வேளைகளைச் சில குடும்பத்தார் பரம்பரையாகச் செய்யும் போது
வேலைக்கு ஆள் இல்லாமல் போகாது என்பதாகவும் -சமூகத்தின் உற்பத்தி சக்கரம் நிற்காமல் சுழலும் என்பதாகவுமே அப்போதிருந்தவர்கள் அறிவு வேலை செய்தது அந்த வரலாற்றுக் கட்டத்தில் அவர்களால் அதற்கு மேல் ஒன்றும் செய்திருக்க முடியாது என்பதை நாம் அறிந்து கொள்ளல் அவசியம் .இஃதை தற்போதுள்ள நிலமைகளைக் கொண்டு சிந்தித்துப் பார்த்தால் அபத்தமாக இருக்கும் எப்படிஎனில் மன்மோகன் சிங் தலைப்பாகைக்குபதில் கிரீடம் வைத்துக் கொண்டு வந்தால் எப்படி இருக்குமோ அப்படி .
அப்போ சாதி சரி என்றோ சாதிய ஒடுக்குமுறை நியாயமானதென்றோ நான் சொல்வதாகக் கற்பிதம் நீங்கள் செய்துகொள்ளலாகாது.
ஒரு விசயத்தைக் கவனித்தோமானால் அம்பேத்கர் மற்றும் பெரியார் போன்ற சமூகப் போராளிகள் சமூகத்தின் உற்பத்தி முறையைப் புரட்சிகரமானதாக மாற்றாமலேயே மேல்கட்டுமானத்தை மட்டும் மாற்றிவிட முடியும் எனக் கருதினார்கள் .
சமூகத்தின் உற்பத்திசக்திகளின் வளர்ச்சிக்கேற்ப உற்பதி உறவுகளில் ஏற்படும் மாற்றத்தினால் சாதி இல்லாமல் ஒழியும் என்பதுதான் உண்மை தற்போது எந்தக் கம்பெனியில் சாதிபார்த்து பழகுகிறார்கள் அல்லது
சமூகத்தில் கல்யாணம் தவிர்த்து எதற்குச் சாதிபாக்கிறார்கள் இந்த நிலமை வருவதற்குக் காரணம் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி அதன் காரணமாக
ஏற்பட்ட முதலாளி தொழிலாளி உறவுமுறை ஆகியவையே காரணம்

இணையத்தில் சாதிசண்டை நடைமுறையில் வேறு:
----------------------------------------------------
இணையத்தில் பார்பனியம் எனப் பேசுபவர்கள் தங்களது அலுவலகத்தில் அதைப் பற்றி விரிவாகப் பேச இயலாமை
ஏன் என்ற ஒரு நடைமுறை பற்றிப் பரிசிலீத்தோமானால் நாம் அறிந்து கொள்ளலாம் இணையத்தில் மட்டுமே சாதி
பிரச்சனை இந்தளவு இருக்கிறது நடைமுறையில் கிராமங்களில் அல்லாமல் உற்பத்தி சக்திகள் வளர்ந்துள்ள இடங்களில் சாதி பாகுபாடு இல்லாமல் இருப்பதும்
முதலாளித்துவ ஓட்டு வாங்கிக் கட்சிகள் சில மட்டுமே சாதியை ஓட்டுக்காகப் பயன்படுத்துவதையும் காணலாம் . இந்த
முரண்பாடு நமக்குப் புகட்டும் பாடம் நடைமுறையில் எதிர்கொள்ளும் சிக்கல்களில் ஒன்றாகப் பிரதானமான முரண்பாடாகச் சாதி இல்லாமல் இருப்பதும்
ஆனால் முதலாளித்துவம்தான் இருக்கிறதும் முகத்திலறையும் உண்மை.

இப்போ மிகப்பெரிய கேள்வி இந்த இணையச் சண்டைகளுக்கு நடைமுறைக்கும் சற்றும் சம்பந்தமில்லாம இருக்கும்போது - இந்த இணையச் சண்டைகளால் சமூகத்து கிஞ்சித்தும் நன்மை இல்லை என்பதையும் வெறும் வாய்க்கு அவல் கிடைத்தை போலவே இந்த இணையச் சண்டைகள் பொழுதுபோக்குக்காக நடத்தப்படுவதாக ஐயுறவில்லை உறுதியாக நம்புகிறேன்.

சண்டையின் அணிசேர்க்கை :
----------------------------------
இந்தச் சண்டைகள் என்பது சாதாரணமாக நமது நேரத்தை விழுங்குவதில்லை மிக அதிகமான நேரம் இது நேரத்தை விழுங்கி விடுகிறது .கவனமாக இவ்விவாதங்களைத் தவிர்க்காத தருணத்தில் நாம் தடுக்கி விழுந்து இதே வேலையாகச் செய்ய வேண்டியதிருக்கிறது.
இதனால் சமூகத்திற்கு யாதேனும் சிறிதளவு நன்மை விளையுமா என்று பார்த்தால் ஏதுமில்லை. சண்டைக்கான அணிசேர்க்கை எப்படி உருவாகிறதெனப் பார்ப்போம் ஒருபக்கம் உயர்சாதியை சேர்ந்த ஏற்கனவே
வசதியான வாழ்நிலை சூழலில் கணினி அறிவை பெறவும் கணினி சம்பந்த
பட்ட வேலைகளில் அமர்ந்து விட்டுள்ள பார்பனர்கள் மற்றும் உயர்சாதிக்காரர்களும்.

இன்னொரு பக்கம் அவர்களுக்கு இணையாகத் தற்கால நவீன கல்வியின் மூலம் நல்ல ஆங்கில அறிவும் முற்போக்கான சிந்தனையும் உள்ள இளைஞர்களும் என இந்த அனி பிரிந்து இருக்கிறது.

விளையும் நன்மை:
-------------------------
உண்மையில் நமது சமூகத்தில் நாளொரு தொழிலாளர் போராட்டங்கள் நடந்து வருகிற து தினமும் ஒவ்வொரு புதுப்பிரச்சனை நமது நாட்டு மக்களுக்கு ஏற்படுகிறது விலைவாசி விண்ணை முட்ட இருக்கிறது இருபதாயிரம் சம்பளம் வாங்கிகொள்பவனுக்கு வாழ்க்கையை
ஓட்டுவது இயலாததாகவும் வேலை தேடி அந்நிய தேசம் அல்லது வேறு ஊர் எனப் பிழைப்பு என்பதே பெரும் பிரயத்தனமான விசயமாக இருக்கின்ற சூழலை மறந்து இணையத்தில் உக்கார்ந்து சம்பந்தமில்லாமல் சாதி பிரச்சனையே முன்னோக்கி தள்ளிகொண்டு பிளவுபட்ட மனநிலையில் நம்மை இருத்தி கொண்டுள்ளோம் .

இணையத்தில் செயல்படும் நாம் சமூகத்தின் பிரச்சனைக்கு ஒரு துளியேணும் நமது சிந்தனையைச் செலவழிக்க் என்ன குரூப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறோம் என்பதைச் சிந்தித்துபார்க்கும்வேளையில் மிக
சொற்பமே அல்லது பூச்சியமே என்பதை உணரலாம்.

சுயவிமர்சனம்:
---------------
மேற்கண்ட எல்லாப் பிழைகளிலும் தவறுகளிலும் எனக்கும் சிறிதளவேணும்  பங்குண்டு என்பதை அறிகிறேன் ஆனால் இந்த விச சுழலில் இருந்து வெளியேற விரும்புகிறேன் என்பதைச் சமூகத்திற்குத் தெரிவித்துக் கொண்டு
மேற்கொண்டு நாம் முன்னேறுவோம் விமர்சனம் சுயவிமர்சனம் என்கிற மார்க்சிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் தர்க்கம் புரிவோம்


2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post