அய்யா சாயப்பட்டறை உரிமையாளர்களே !

இந்தியாவின் அந்நிய செலாவணியில் முப்பது சதவீதம் நீங்களும் உங்களை நம்பி இருக்கும் ஏற்றுமதியாளர்களும் பெற்றுதறுவது உண்மைதான் ,

நாங்களோ நீங்கள் சாயம்போடும் துணியால் பிழைப்பு நடத்துவது உண்மைதான்

இதுவரை ஆரம்பித்த சாயப்பட்டறைகள் எதுவும் நட்டத்தால் இழுத்து மூடப்படவில்லை என்ற உண்மையை நான் உங்களுக்கு சொல்லத்தான் வேண்டும் .

மேலும் முதலில் 80 சதவீதமாக இருந்த உங்கள் லாபம் இப்போதும் 50 சதவீதமாக
குறைந்து மட்டுமே இருக்கிறது தவிர லாபம் இல்லாமல் இல்லை .

இந்நிலையில் நீங்களோ மீண்டும் மீண்டும் கோர்ட் உத்தரவை மீறி கழிவு நீரை குடிநீர் ஆதரங்களில் கலக்கிறீர்கள் .

கேட்டால் எங்களால் முடியாது அரசு நிதி தரவேண்டும் என்கிறீர்கள்

மண்ணை நிலத்தை பாதித்துவிட்டோம் என்ற கொஞ்சநஞ்ச குற்ற உணர்வு
உங்களுக்கும் கிடையாது , அரசுக்கும் கிடையாது .

இப்போதெல்லாம் கூலிக்கு ஆள் நீங்கள் லல்லு பிரசாத்தில் பீகாரிலும்
உபியிலும் எடுக்கிறீர்கள் தமிழன் சங்கம் வைப்பான் கூலி கேட்பான்னு
தெரியும் .

தினமும் 70 ரூபாய்க்கு கெமிக்கலில் கிடந்து பாடுபடும் அந்த தொழிலாளியை
சுரண்டி மேலும் தண்ணீரை ,மாசுபடுத்தில் ,நிலத்தை விதவையாக்கி
நீங்கள் சேர்த்துள்ள சொத்துக்களை எப்படி அனுபவிக்க போகிறீர்கள்

ஆமாம் நீங்கள் அனைவரும் திருப்பூரில் இடம் வாங்குவதில்லை கோவையிலும்
கோபியிலும் வாங்குகிறீர்கள் பார்த்துங்க அங்கயும் டையிங் ஆரம்பிச்சுடாதீங்க

உங்கள் நடிப்பு இதோ :
சாய,​​ சலவைப் பட்டறைக் கழிவுகள் நீர்வள ஆதாரங்களில் கலக்கக் கூடாது

கரூர்,​​ பிப்.2:​ சாய,​​ சலவைப்பட்டறைக் கழிவுகளை நீர் வள ஆதாரங்களில் கலக்கக் கூடாது என கரூர் மாவட்ட நிலத்தடிநீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

​ அச்சங்கத்தின் தலைவர் கே.​ ராமசாமி அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

​ ​ கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சாய மற்றும் சலவைப் பட்டறைகளால் அமராவதி ஆறு முற்றிலும் நஞ்சாக மாறி வருகிறது.​ மேலும்,​​ அமராவதியின் தென்கரை,​​ வடகரை பகுதிகளில் அமைந்துள்ள பாசன வாய்க்கால்கள் கழிவுநீர் கால்வாயாக மாறி வருகின்றன.​ சுற்றுப்பகுதிகளிலுள்ள கிணறுகளும் நஞ்சாக மாறி வருவதால் கிணற்று நீரை எதற்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

​ ​ சாயக்கழிவுகளை சுத்தம் செய்யும் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் வெறும் கண் துடைப்பாக பெயரளவில் செயல்படுகின்றன.​ இவற்றைக் கண்காணித்து முறைப்படுத்த வேண்டிய தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் சரியாக கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதில்லை.​ சாயப்பட்டறைகளும் மறுசவ்வூடு பரவல் முறையில் சுத்திகரித்து மறுசுழற்சி செய்ய ஏற்படுத்தப்பட்டுள்ள சட்டநெறிமுறைகளை பின்பற்றுவதில்லை.பின்பற்றப்படுவதில்லை.

​ ​ எனவே,​​ சாயக்கழிவு நீரை ஆறு மற்றும் வாய்க்கால்களில் வெளியேற்றக்கூடாது.​ தமிழக அரசு வல்லுநர் குழுவை அமைத்து சாய மற்றும் சலவைப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் நீர்வள ஆதாரங்களை ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.​ பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்.

​ ​ கால்நடைத் துறையின் மூலம் கிராமங்களில் கணக்கெடுப்பு செய்து இறந்த மற்றும் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.​ சுற்றுச்சூழல் சட்டங்களையும்,​​ மாசுக்கட்டுப்பாட்டு விதி முறைகளும் மீறும் ஆலைகளை மூட நடவடிக்கை வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மாசுகட்டுபாட்டு வாரியம் லஞ்சம் வாங்கி கொண்டு மண்ணை மாசுபடுத்தியது போதாதென்று
ஒன்றுமே தெரியாததுபோல நடிக்கிறது .

மேலும் ஒரு செய்தி :

-------------------------------------------------------------------------------

5. திருப்பூர் நொய்யலாற்றுக் கழிவுகள்: தற்போதைய நீதிமன்ற உத்தரவு ஒன்று திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர்கள் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. நீதிமன்ற உத்தரவால் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றனர் சாயப்பட்டறை உரிமையாளர்கள். தீர்ப்பு இதுதான்- 'சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேற்றும் கழிவுநீரைச் சுத்திகரிப்பதற்கான நிலையங்களை அமைக்க முயற்சி எடுக்காத (25% முன் பணம் செலுத்தாத) 660 ஆலைகளை மூட வேண்டும்' என்பது.

சுதாரித்துக் கொண்ட ஆலை அதிபர்கள் 25% முன் பணத்தை 10 சதமாக குறைக்க வேண்டும் என்றும் 'ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்' முறையில் கழிவுநீரை வெளியேற்ற தற்போது 10% முன் பணத்தை செலுத்துவதாகவும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்ததாக கூறப்பட்ட 660 சாயப்பட்டறைகளில் 149 சாயப் பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. வழக்கு விசாரணையில் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் காலங்காலமாக இருந்து வரும் இப்பிரச்சினையைத் தீர்க்க மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை 'ஒன்றுமே இல்லை' என்பதுதான்.

ஐ.மு.கூட்டணியின் நிதியமைச்சராக மகுடம் சூட்டிய ப.சிதம்பரம் 2000 கோடி ரூபாய் வருமானம் வருகிறது என்பதற்காக 'பின்னலாடைப் பூங்கா'வை ஆரம்பித்து வைத்ததோடு சரி, அங்கிருக்கக் கூடிய பிரச்சினைகளைப் பற்றி வாயே திறக்கவில்லை. பனியன் தொழிலின் முக்கியப் பொருளான சாயங்களைத் தயாரிக்கும் சாயப்பட்டறைத் தொழிலில் நேரடி யாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள 10 லட்சம் தொழிலாளர்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாதது வேதனை அளிக்கிறது என்கிறார் தொழிலாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருவர். பலமுறை நீதிமன்றம் உத்தரவிட்டும் மாநில அரசால் உருப்படியான ஒரு அறிக்கையைக் கூட தாக்கல் செய்ய முடியவில்லை.

இதற்கு முன் 2002 ஆம் ஆண்டு மாசுக் கட்டுப்பாடு வாரிய உத்தரவின் பேரில் கரூரில் மட்டும் சுமார் 110 சாயப்பட்டறைகள் மூடப்பட்டன. இவற்றைத் திறக்கக் கோரி 2003 ஜனவரி மாதத்தில் அங்குள்ள 600 பட்டறைகள் வேலை நிறுத்தம் செய்தன. அதன் பின்னர் என்ன நடந்ததுவென்றே தெரியவில்லை. மீண்டும் 110 சாயப்பட்டறைகளும் திறக்கப்பட்டு வேறுவேறு பெயர்களில் வேறுவேறு இடங்களில் தொழிலை ஆரம்பித்துவிட்டன.

'சவ்வூடு பரவல் முறையில் சுத்திகரிப்பதற்கு 10% முன்பணம் மட்டுமே தங்களால் செலுத்த முடியும், இந்த 'ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்' தொழில்நுட்பம் முழுமையான பலன் கொடுக்குமா என்றும் தெரியவில்லை. எனவே அரசு இது குறித்து விளக்கவேண்டும்' என்று ஆலை அதிபர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு தரப்பிலிருந்து இவர்களின் கோரிக்கைக்கு உரிய விளக்கம் அளிக்காதது பிரச்னையை மேலும் பெரிதுபடுத்தியுள்ளது.

'டெங்கு' விஷக்காய்ச்சலுக்கு 12 வயது பள்ளி மாணவியும் 4 வயது சிறுவன் ஒருவனும் பலியாகியிருக்கின்றனர். இது மீடியாக்களால் வெளியுலகிற்கு கொண்டு வரப்பட்ட செய்திகள். வெளிவராமலே தினம் தினம் பல்வேறு விதமான தொற்றுநோய்களுக்கு ஆளாகி பலர் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். திருப்பூரில் 1000க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளும் பிளீச்சிங் தொழிற்சாலைகளும் உள்ளன. சாயப்பட்டறைகளால் நிலத்தடி நீர் 1200அடி வரை உபயோகப்படுத்த முடியாததாகிவிட்டது. சாயப்பட்டறைகளின் தேவைகளுக்காக சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஒரு நாளைக்கு எடுத்துச் செல்லப்படும் நீரின் அளவு 12,000,00 லி (12லட்சம் லிட்டர்). 1997ல் நிரம்பி வழிந்த ஒரத்துப்பாளையம் அணையின் நீரைக் குடித்த ஆயிரக்கணக்கான கால்நடைகள் இறந்துவிட்டன.

தமிழகக் கிராமங்களிலும் காவிரி டெல்டா பகுதியிலும் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் வறட்சியின் விளைவாக பல தரப்பட்ட மக்களும் குறிப்பாக தென் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் திருப்பூரை நோக்கி படையெடுப்பதால் தண்ணீர்ப் பிரச்னை மேலும் விசுவரூபம் எடுத்துள்ளது. பயன்படுத்த முடியாத அளவுக்கு நச்சுத்தன்மை ஏறியுள்ள நீரையே வெளியூரிலிருந்து பிழைப்பு தேடி வந்திருக்கும் பலரும் பயன் படுத்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வளவு பிரச்சனைகளுக்கிடையேயும் திருப்பூரிலும் அதனைச் சுற்றியுள்ள சாயப்பட்டறைகளுக்கும் பிளீச்சிங் தொழிற்சாலைகளுக்கும் தினந்தோறும் 12 லட்சம் லிட்டர் தண்ணீர் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து கொண்டு வரப்படுகிறது.
இதன் விளைவாகக் கிராமங்களின் நிலத்தடி நீர் வேகமாகக் குறைந்து கொண்டே வருகிறது.

இதனால் விவசாயத்திற்கு கிடைத்து வந்த நிலத்தடி நீரும் வேகமாகக் குறைவதோடு 12 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்படுவதால் மீதமிருக்கின்ற நிலத்தடி நீரும் மாசுபட்டுள்ளது. நொய்யலாற்றுப் படுகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், அவற்றின் இருபுறமும் அமைந்துள்ள கிராமங்களின் நிலத்தடி நீர், 300 அடி வரை உபயோகப்படுத்த முடியாததாகி விட்டது என்று கூறுகிறது.

நிலைமை தினமும் மோசமாகிக் கொண்டே போகிறது. தொழிற்சாலைகளுக்காக தண்ணீர் எடுக்க வரும் லாரிகளைச் சிறைபிடிப்பதும் பல கிராமங்களில் தண்ணீர் லாரிகளை எதிர்த்து விவசாயிகள் முற்றுகைகளில் ஈடுபடுவதும் தொடர் கதையாகிக் கொண்டே போகிறது. விவசாயக் கூட்டமைப்பு ஒன்று இந்தப் பிரச்னையை உயர்நீதி மன்றத்திற்கு கொண்டு சென்றதன் விளைவாக தற்போது பலன் கிடைத்தது.

உயர் நீதிமன்றமும் 19-6-05லிருந்து வாரத்தின் கடைசி நாட்களான சனி,ஞாயிறு கிழமைகளில் சாயப்பட்டறைகள் மூடப் பட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதனால் 20 கோடி லிட்டர் சாயக்கழிவு நீர் வெளியேறுவது தவிர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி சிறிது ஆறுதல் அளித்தாலும் இதை கண்காணிக்க குழு எதுவும் அமைக்கப்படாததால் இதுவும் சோடை போக வாய்ப்பிருக்கிறது.

அவ்வப்போது இதுபோன்ற உத்தரவுகள் வழங்கப்படுவதும் சாயப்பட்டறைகள் மூடப்படுவதும் மீண்டும் திறக்கப்படுவதும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால் உருப்படியாக ஒன்றும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. இதைத் தவிர்க்க வேண்டுமெனில் உப்புக்குச் சப்பாக இருக்கும் சுற்றுச்சூழல் சட்டங்களை கடுமையாக்குவதும் திருப்பூர் சாயப்பட்டறைகளை முறைப்படுத்துவதற்கு அவசர சட்டங்களைப் பிறப்பிக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

உங்களுக்கு வேலை செய்ய ஆள்வேண்டும் ஆனால் குடிக்க அவனுக்கு தண்ணீர் இல்லை
இது எதனால் என்று எப்போதாவது சிந்தித்து இருப்பீர்களா

நீங்கள் பயன்படுத்தும் விலைகுறைந்த கெமிக்கல்கள் உலக நாடுகளில் பயன்படுத்த
தடை செய்யப்பட்டவை என உங்களுக்கு தெரியாதா

சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ரசாயணங்கள் எவை என உங்களுக்கு தெரியாதா

எல்லாம் தெரியும்

ஒட்டுமொத்த மக்களை ஏமாற்றனும்
தொழிலாளிகளை ஏமாற்றனும்
ஏற்றுமதியாளனை ஏமாற்றனும்

நீங்கள் மட்டும் தப்பிகனும் என்பதுதானே உங்கள் லாபவெறி

ஏன் உங்களால் சவ்வூடு பரவல் போட முடியாதா?

அதைசெய்ய காசு இல்லையா ?

கருப்பில் வெள்ளையில் என நீங்கள் வைத்து இருக்கும் பணம் என்ன செய்ய
இருக்கிறது

அமெரிக்காவில் படிக்கும் உங்கள் மகனோ மகளோ நாளை திருப்பூருக்கு
வரலாம் ஆனால் இங்கு வெறும் சுடுகாடுதான் இருக்கும்
மறவாதீர்கள்

எல்லாம் கெமிக்கல் கலந்ததண்னீரால் அழிந்து போயிருக்கும்


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post