சுதந்திர தின விழா 15/08/2015







சுதந்திர தினம் இத்தோடு மூன்றாம் ஆண்டுதான் அதாங்க எங்கள் பகுதியில் கொடியேத்தி வைப்பது மூன்றாம் ஆண்டு. காலைமுதலே மைக்கை பிடித்து சுதந்திர தின உரையை ஆற்றி கொண்டிருந்தேன் ஆனால் மக்கள் கேட்டார்களோ என்னவோ அறியேன் . எதுக்கும் காதில் போட்டு வைப்போம் என்று திப்பு சுல்தானின் மூன்று போர்களும் நான்காம் போரில் அவரது ஊழியர்களுக்கே வெள்ளைகாரன் லஞ்சம் கொடுத்துதான் அவரை மடக்கினான் என்ற தகவலுடன் பேச ஆரம்பித்தேன்.
எங்கள் கிராமமோ மிகவும் மோனத்தில் இருந்தது அப்போது காலை ஏழுமணி
வீட்டில் இருந்து அடிக்கடி ஆள் வந்து கொண்டே இருக்கிறது . என்னோட குழந்தைகள் தான் . “ அப்பா யாருகிட்ட பேசுற மேடைக்கி கீழே ஆளே இல்லையே” என்றான் மகன் . தம்பி எல்லாரும் வீட்டில் இருந்தே கேட்டு கிட்டு இருக்காங்கடா என்றேன்.
சுதந்திர இந்தியாவும் நமது பொறுப்பும் கடமையும் என்கிற தலைப்பும் இன்னும் சில தலைப்புகளும் நாங்கள் கொடுத்திருந்தோம் பேசுவதற்கு.
அந்தந்த தலைப்புகள் ஏன் கொடுக்கப்பட்டன என்பதை பற்றியும் இந்த 69 ஆண்டுகாலத்தில் இன்னும் வறுமை ஒழியவில்லை என்பதை குறித்தும் சிறிது சொல்லி வைத்தேன் 30 கோடி பேருக்கு இன்னும் மின்சாரமே வரவில்லை என்பதெல்லாம் சொல்ல சொல்ல மணி 10 ஆகவும் சரியாக ஊராட்சி மன்ற தலைவரும் வந்தாரு கொடி ஏத்த.
அவருக்கு எங்களோட சங்கத்தை கலைக்கனும்னு நெம்ப நாள் ஆசை ஆனாலும் அவரைத்தான் கொடி ஏத்த அழைப்போம் .
அதிகபட்சம் பத்து பேருதான் இருந்தாங்க கொடி ஏத்தும் போது .
பிறகு ஊராட்சி தலைவருக்கு கூல் டிரிங்க்ஸ் கொடுத்து மற்றவர்களுக்கு சாக்லெட் கொடுத்து கொடியேத்து நிகழ்ச்சியை முடித்து வைத்தோம்.
மதியம் 2.30க்கு விளையாட்டு போட்டி ஆரம்பிக்கலாம்னு பார்த்தால் பரிசு பொருள் வாங்கி வந்தவர் மிக குறைய வாங்கி வந்துட்டார் ,. உடனே நானும் நண்பரும் பைக் எடுத்துட்டு திருப்பூருக்கு ஓடி இன்னும் நிறைய பரிசுகளை வாங்கியாந்தோம்.
விளையாட்டு ஆரம்பிக்கும் போது வராதவர்கள் மைக்கில் அறிவிக்க ஆரம்பித்ததும் கொஞ்சம் கொஞ்சமாக கலை கட்ட ஆரம்பிட்தார்கள் .
நாங்கள் ஏற்பாடு செய்தது 7 போட்டி ஆனால் முடிவாக முடிந்தது 15 போட்டி மறுபடி பரிசு வாங்க கிளம்பினேன். நான் பரிசு பொருள் வாங்க போனதும்
நம்ம பேச்சாளர் கோவையில் இருந்து வந்துட்டார் . பிறகு அவரை பேச சொன்னோம் அவரோ ஐஎஸ் ஓ பயிற்சியாளர் . இங்கே வந்து பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சுட்டார் . ஒரு வழியாக அவரது பேச்சு முடிந்ததும்.
எங்க ஏரியா பசங்க தாயின் மணிக்கொடி பாட்டுக்கு ஆட ஆரம்பித்ததும் கூட்டம் கூட ஆரம்பித்தது. எங்கடா கூட்டம் வரப்போகுதுன்னு 50 சேருக்கு மட்டும் ஆடர் கொடுத்திருந்தோம் ஆனால் வந்த கூட்டம் 200 முன்னூறுன்னு எல்லாம் நின்று கொண்டே நிகழ்வை பார்க்க ஆரம்பிச்சாங்க பலர் மாடி மேல நின்னு சிலர் தரையில் துண்டை விரித்து அமர்ந்துன்னு.
ஒரு போதை ஆசாமி வேற இடையில் வந்து ஒரு இடைஞ்சல் கொடுத்தான் அவனை தனியா தள்ளிட்டு போயி அண்ணே நம்ம ஊரு பங்க்சன் சவுண்டு உடலாமான்னு பேசி சமாதானம் படித்திட்டு பார்த்தா?
அப்துல்கலாமின் அவரது கனவை நனவாக்க நாம் என்ன செய்யவேண்டும் தலைப்பில் தேன்மொழின்ற சின்ன பொண்ணு பேச்சில அறிஞர் அண்ணாவை மிஞ்சும் அளவுக்கு பேசியது.
இன்னும் கூட்டம் அதிகமானது 100 சேரை உடனே கொண்டு வர சொன்னேன்.







சேர் வந்ததும் ஆளுக்கு பத்து சேரை எடுத்து உக்கார்ந்து நிகழ்வை ரசிக்க ஆரம்பித்தார்கள்.
அடுத்து அடுத்து சின்ன வாண்டுகள் சினிமா பாட்டுக்கு ஆடவும் ஒரே கரகோசம் – இதில் கட்டுரை போட்டிகளும் வாசிச்சி காட்டனும்னு சொன்னதும் பல பிள்ளைகள் கட்டுரையை எடுத்து வந்து வாசிக்க வாசிக்க
நேரம் அதிகமாகுதுன்னு சொல்லிட்டு ஒரு போலீஸ் காரர் வந்துட்டார்  ஏழரைக்கு முடிச்சிடுங்கன்னு சொல்லிட்டு போனார்.
ஆனால் இங்கே உற்சாகம் கரைபுரண்டு ஓட ,நேரம் போவதே தெரியவில்லை.
நிகழ்ச்சியை நாங்கள் நடத்துகிறோமா மக்கள் நடத்துகிறார்களான்னு தெரியலை .
ஒரு வழியாக பரிசு வழங்கும் நிகழ்வு வந்தது எல்லாருக்கும் பரிசில் வழங்க பலரை மேடைக்கு அழைத்து கொடுத்தோம்.
நன்றி உரையை நான் வழங்கியதும் விழா இனிது நிறைவுற்றது.
எங்களோடு இருந்து உதவி புரிந்த சிறுவன் சொன்னான் என்னையும் உங்க சங்கத்தில சேர்த்துகங்க என்று .....................

இன்று மாவீரன் சுபாஸ் நினைவு நாள் அவரது தியாகத்தை போற்றுவோம் 

`குருதியைக் கொடுங்கள். உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன்!’ என்று இவர் உரக்கக் கூவிய பிறகுதான் இளைஞர்கள் பலர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்க ஆர்வமுடன் முன் வந்தார்கள்!

ஆயுதப் போராட்டம் மூலம் இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் சர்வாதிகாரி ஹிட்லரைச் சந்தித்தார் நேதாஜி `இந்தியாவின் வருங்கால சர்வாதிகாரியை வரவேற்பதில் பெருமைகொள்கிறேன்!’ என்று ஹிட்லர் கை குலுக்க, `வருங்கால சுதந்திர இந்தியாவை உருவாக்க மட்டுமே உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன்!’ என்று உடனே பதில் அளித்தார் நேதாஜி!

இன்னும் உயிரோடு இருக்கும் சுபாஷ் சந்திரபோஸ் பேசுகிறேன்!’ இப்படித்தான் நேதாஜியின் முதல் வானொலி உரை தொடங்கியது, 1944-ல் `ஆசாத் ஹிந்த்’ வானொலியில் உரை நிகழ்த்தியபோதுதான் மகாத்மா காந்தியை,`தேசப்பிதா’ என்று முதன்முதலில் அழைத்தார்.`ஆசாத் ஹிந்த்’ என்றால் `சுதந்திர இந்தியா’ என்று பொருள்!  


ஒரே ஒரு முறை மதுரைக்கு வந்தார், பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் மேற்கொண்ட முயற்சியால் அது சாத்தியமாயிற்று. இந்திய தேசிய ராணுவத்தில் நேதாஜியின் பட்டாலியனின் கீழ் 600-க்கும் அதிகமான தமிழர்கள் இருந்தார்கள். `அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!’ என்று அன்று நெகிழ்ந்தார் நேதாஜி! 

பெண்களை ராணுவத்தில் பங்கேற்கச் செய்தது முக்கியமான வரலாற்று நிகழ்வு. காந்தி எப்படி பெண்களை அகிம்சையின் வடிவமாகப் பார்த்தாரோ, அதற்கு நேர்மாறாகப் பெண்களைச் சக்தி வாய்ந்த துர்க்கைக்கு நிகராகப் பாவித்தார் நேதாஜி!

1943-ல் நேதாஜியின் படை வெள்ளையர்களிடம் இருந்து அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளைக் கைப்பற்றியது. அவற்றைக் கைப்பற்றியவுடன், நேதாஜி செய்த முதல் வேலை அந்தத் தீவுகளுக்கு `ஷாஹீத்’ (தியாகம்) மற்றும் `ஸ்வராஜ்’ (சுயராஜ்யம்) என்று பெயர் மாற்றியதுதான். அந்தத் தீவுகளுக்கு ஆளூநராக தமிழர் ஒருவரைத்தான் நியமித்தார். அவர்.... கர்னல் லோகநாதன்!


Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post