திரிபுவாதிகளின் கையில் மக இக

சூறாவளியில் இருந்து மீள்பதிவு : நன்றி சூறாவளி தோழர்கள்
சுட்டி :http://suraavali.blogspot.com/2011/09/blog-post_17.html

வினவு இணையதளம்,புதிய ஜனநாயகம்,புதிய கலாச்சாரம் ஆகிய ஊடகங்கள்,மற்றும் இவைகளின் தோழமை அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக் கழகம்,விவசாயிகள் விடுதலை முன்னணி,புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,பெண்கள் விடுதலை முன்னணி,மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகள் சமச்சீர் கல்வி விவகாரத்தில் எதிரும்.புதிருமான நிலைப்பாடுகளை கொண்டிருந்தன என்பதையும் ,இந்த நிலைப்பாடுகள் மூலம் மேற்கணட அமைப்புகள் சீர்த்திருத்த வாத பாதையில் மூழ்கிவிட்டன என்று "சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப் போனது வினவும்,அதன் தோழமை அமைப்புகளும்"என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகள் மூலம் அம்பலப்படுத்தியிருந்தோம்.


மேற்கண்ட கட்டுரைகளை ஆரம்பம் முதல் இறுதிவரை கவனமாக வாசித்தர்களுக்கு ஒரு விடயம் தெளிவாக தெரிந்திருக்கும்.இந்த அமைப்புகளை பற்றி நாங்கள் கட்டுரை எழுதுவதற்கு முன்பே முழுமையாக ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வரவில்லை.கட்டுரைகளின் போக்கில் தான் ஆய்வு செய்தோம்.இதனால்தான் இந்த அமைப்புகளை பற்றி எமது ஆரம்ப கட்டுரைகளில், அரசியல் சித்தாந்த,ரீதியாக உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் அதே நேரத்தில், இந்த அமைப்புகளிடம் தோழமை ரீதியான அணுகுமுறையையும் வெளிப்படுத்தியிருந்தோம்.ஆனால் வளர்ச்சிப் போக்கில்தான், இந்த அமைப்புகள் அதிகாரவர்க்க பாதையாளர்களாக மாறிவிட்டிருந்ததை எம்மால் உறுதி செய்து கொள்ள முடிந்தது.ஆகவே இவர்களிடம் எமது ஆரம்பக் கட்ட அணுகுமுறை எவ்வித தாக்கத்தையும்,விளைவையும் ஏற்படுத்தாது என்பதையும்,அதே நேரத்தில் அதற்கு நேர் எதிரான விளைவுகளையே எதிர்கொள்ள நேரிடும் என்பதையும் உணர்ந்தோம்.ஆளும்வர்க்கத்தின் ஒரு அங்கமாக மாறிப்போயுள்ள இவர்களை, மக்கள்மத்தியில் அம்பலப்படுத்தி முறியடிப்பதை தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கும் நாங்கள் வர வேண்டியதாகியது.

அதே நேரத்தில் இப்பணியை நாங்கள் செய்யும் போது,அதிகார வர்க்க பாதையாளர்களான, இவர்களின் எம்முடனான அணுகு முறை அவ்வர்க்கத்திற்கே உரிய வகையில்,நேர்மையற்ற முறையில் தான் இருக்கும் என்பதையும் நாங்கள் அறிவோம்.இதை சமச்சீர் கல்வி விவகாரத்தில் இவர்களை அம்பலப்படுத்தும் போது, இவர்கள் எம்முடன் கையாண்ட விமர்சனம்,சுயவிமர்சனமற்ற மெளணம் என்ற நேர்மையற்ற அணுகுமுறையிருந்தே உறுதின் செய்து கொண்டுள்ளோம்.இதுதான் அதிகாரவர்க்க பாதையாளர்களின் இயல்பு என்பதையும் நமக்கு அவர்கள் உணர்த்தியுள்ளனர்.

சோவியத் ஒன்றியம்,மக்கள் சீனம் ஆகியவற்றை கைப்பற்றிய அதிகாரவர்க்கப் பாதையாளர்கள் செய்த முதல் வேலையே கட்சியில் இருந்த உண்மையான, பல லட்சக்கணக்கான கம்யூனிஸ்டுகளை கட்சியில் இருந்தே நீக்குதல்,சிறையில் அடைத்தல்,கொலை செய்தல் ஆகியவற்றின் மூலம் தமக்கு எதிர்ப்பில்லாத ஆபத்தற்ற சூழலை உருவாக்கிக் கொண்டதுதான்.இதை இவர்கள் எந்தளவிற்கு உறுதி செய்துகொண்டார்களோ,அந்த அளவிற்குதான் கட்சியிலும்,ஆட்சியிலும் அதிகாரவர்க்க முதலாளித்துவத்தை புகுத்தினர்.இந்த வரலாற்று பின்னணியிள் அடிப்படையையும் கணக்கில் கொண்டுதான்,இவர்களை பற்றிய அடுத்தடுத்த முடிவுகளுக்கு வந்தோம்.


அதிகாரவர்க்க பாதையாளர்கள் தமது வர்க்க இயல்புக்கு ஏற்பத்தான் நடந்து கொள்ளுவார்கள் என்பதை உறுதிபடுத்தும் வகையில், இவர்களின் நேர்மையற்ற அணுகுமுறை ஒன்றை இப்போது சுட்டிக்காட்டுகிறோம்.இந்த அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் தனித்தனியே இணைய தளம் நடத்தி வருகின்றனர் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.இவர்களை இணையதளம் நடத்த அனுமதிக்கும் இவர்கள், சூறாவளியின் முன்னால் ஆசிரியர் மூடக்கிழவன் சூறாவளி இணையத்தை நடத்தக்கூடாது என ஒருதலைபட்சமாக  தடை விதித்துள்ளனர்.இதற்கு இவர்கள்,"அமைப்பு சார்பில் அதிகார பூர்வமாக 'வினவு' இணையதளத்தை நடத்தும் போது,அமைப்பில் உள்ள தோழர்கள் ஆளாளுக்கு,தனித்தனியே இணைய தளம் நடத்தக்கூடாது", என்று கூறித்தான் தோழர் மூடக்கிழவனுக்கு தடைவித்துள்ளனர்.ஆனால் மற்றவர்களுக்கு இப்படி தடைவிதிக்கப்படவில்லை.இந்தத்தடைஒருதலைபட்சமானது,ஓரவஞ்சனையானது என்று மட்டுமே, எம்மால் அப்போது கருத முடிந்தது.இப்போதுதான் இது அதிகாரவர்க்க போக்கில் விதிக்கப்பட்ட தடை என்பதை எங்களால் , புரிந்து கொள்ள முடிகிறது.இப்படி நாங்கள் இவர்களை ,அரசியல்,சித்தாந்த ரீதியாக அதிகாரவர்க்க பாதையாளர்கள் என்று நிரூபித்திருந்தாலும்,எமது இந்த நிரூபணமும்,அம்பலப்படுத்தல்களும்,இவர்களுக்கு குறிப்பிடும்படியான இழப்பு எதையும் ஏற்படுத்திவிடாது.ஏனேன்றால் தமது நிலைப்பாட்டிற்கு ஏற்பத்தான் இவர்கள் தமது அணிகளையும் உருவாக்கியிருப்பார்கள்.இவர்களின் அதிகாரவர்க்க பாதையை எதிர்த்துப் போராடும் உண்மையான,நேர்மையான கம்யூனிஸ்டுகளை இவர்கள் தமது ரஷ்ய,சீன 'காம்ரேடுகள்' பாணியில் ஒடுக்கியிருப்பார்கள்.எமது அம்பலப்படுத்துதல்கள் மூலம் கேள்வி எழுப்புவோரையும் இப்படியே கையாள்வார்கள் என்பதையும் நாங்கள் அறிவோம்.

இறுதியாக நாங்கள் எழுதிய கட்டுரையில் 'கலவை சித்தாந்தம்' என்று குறிப்பிட்டு எழுதியிருந்தோம்."அப்படி என்றால் என்ன வென்று தெளிவாக கூறுங்கள்", என்று சிலத்தோழர்கள் எம்மிடம் கேட்டிருந்தனர்.மேற்கண்ட அமைப்பினர் குறிப்பாக ,புதிய ஜனநாயம்,புதிய கலாச்சாரம் ஆகியவை ஒரே அமைப்பின் இரு ஊடகங்களாக இருந்தாலும் இவைகள் சமச்சீர் கல்வி விவகாரத்தில் எதிரும்,புதிருமான நிலைப்பாட்டை கொண்டிருந்ததை நாம் அறிவோம்.இப்படி இவர்கள் இருவேறு  நிலைப்படுகளை கொண்டிருந்தாலும்,இது இவர்களுக்கு இடையிலான முரண்பாட்டை வெளிப்படுத்துவதாக நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது.இது இவர்களுக்கு இடையிலான வேலைப்பிரிவினை.கம்யூனிஸ்டு கட்சியின் பெயரால்,முதலாளித்துவத்தின் ஒரு வடிவமான அதிகார வர்க்க முதலாளித்துவத்தை நிலைநாட்டுவது தான் இவர்களின் வேலையாகும். சொத்துடைமை வர்க்கத்துக்கான ஜனநாயகத்தை அனைவருக்குமான ஜனநாயகம் என்றுக் கூறி ,உழைக்கும் மக்கள் மீது சர்வாதிகாரம் செலுத்தும் நயவஞ்சக முறைக்கு மாறாக,சொத்துடைமை வர்க்கத்துக்கு உயிர்வாழும் உரிமையை தவிர, ஏனைய ஜனநாயக உரிமைகளை வெளிப்படையாக மறுத்து,சமூகத்தின் ஆகப்பெரும்பான்மையான மக்களாகிய பாட்டாளி வர்க்கத்துக்கு மட்டுமே ஜனநாயகம் என்று வெளிப்படையாக அறிவிக்கும் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற கோட்பாட்டை தமது அதிகாரவர்க்க நலனை பாதுகாக்க அதிகாரவர்க்க முதலாளித்துவ சர்வாதிகாரமாக உள்ளடக்கத்தில் நடைமுறைப்படுத்தினார்கள்.சோசலிச பொருளாதாரத்துக்கு மாற்றாக உற்பத்தியில் முதலாளித்துவ கூறுகளை புகுத்தினர்.இதை கம்யூனிஸ்டு கட்சியின் பெயராலேயே கம்யூனிச சித்தாந்த வார்த்தைகளை பயன்படுத்தியே செய்ததால் இவர்களை அனைவராலும் அடையாளம் காணமுடியாமல் போனது.  வெளிப்படையான முதலாளித்துவ நடவடிக்கைகளையும் பாட்டாளி வர்க்க மற்றும் ,நாட்டின் நலனுக்காகவே செய்வதாகவும்,இதனால் விரைவான முன்னேற்றத்தை அடைந்து விடமுடியும்  என்று மயக்கியதாலும்,சித்தரித்ததாலும் கட்சி அணிகளிடையேயும்,மக்களிடையேயும் எதிர்ப்பு வராமல் தவிர்த்தனர்.

இதைத்தான் சீனத்தில் அதிகாரவர்க்க துரோகியான டெங்சியாவோ பிங் "பூனை கருப்பாய் இருந்தால் என்ன சிவப்பாய் இருந்தால் என்ன எலியை பிடித்தால் சரி", என்று தனது அதிகாரவர்க்க கோட்பாட்டிற்கு நியாயம் கற்பித்துக்கொண்டான் என்பதை சென்ற கட்டுரையிலேயே சுட்டிக்காட்டியிருந்தோம்.டெங்கின் வாரிசுகளான வினவும் அதன் தோழமை அமைப்புகளும் தமது பாட்டனின் கோட்பாட்டு ஒளியில் சட்டத்துக்குட்பட்ட போர்க்குணமான போராட்டங்களை சமூகத்தில் நடத்துவதோடு, மதிநுட்பம் வாய்ந்த சட்ட அறிவுடன் நீதிமன்றத்தில் வழக்குகளை நடத்துவது என்ற கலவை சித்தாந்தத்தை கையாண்டு வருகின்றனர் என்பதையும், அதை நியாயப்படுத்தி வருகின்றனர் என்பதையும்,இதை இவர்கள் புரட்சியின் பெயராலேயே செய்து வருகின்றனர் என்பதையும் ஏற்கனவே எமது தொடர் கட்டுரைகளில் அம்பலப்படுத்தியிருக்கிறோம்.இவர்களின் இந்த கலவை சித்தாந்தத்தின் மூலம் சட்டத்திற்கு உட்பட்டு கிடைத்த நீதிமன்ற வெற்றிகளை காட்டி, தம்மை போலவே தமது அணிகளையும் மாற்றிவிடுகின்றனர்.இதற்கு எதிராக ஒன்றிரண்டு எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் அவற்றை தமது நயவஞ்சகமான்,ஓரவஞ்சனையான அணுகுமுறையின் மூலம் ஒடுக்கிவிடுகின்றனர்.

 ரஷ்ய,சீன கம்யூனிச கட்சிகளை புரட்சிக்கு பின்னர்தான் அதிகாரவர்க்க பாதையாளர்ளால் கைப்பற்ற முடிந்தது.ஆனால் இந்தியாவிலோ கம்யூனிச கட்சி பிறக்கும் போதே போலி கம்யூனிச கட்சியாகத்தான் பிறந்தது.இந்த போலி கம்யூனிச கட்சியை முறியடித்துத்தான் நக்சல்பரி போராளிகள் உண்மையான கம்யூனிச கட்சியை கட்டினர்.அதையும் கூட சாரு மஜும்தார் தலைமையிலான கும்பல், தனிநபர் அழித்தொழிப்பு என்ற பாதையின் மூலம் சீரழித்தது.இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட பல்வேறு குழுக்கள்தான், தனித்தனியே புரட்சிகர குழுக்களை மீளக்கட்டமைத்தன. அப்படி உருப்பெற்ற ஒரு குழுதான் வினவும் அதன் தோழமை அமைப்புகளும், இந்தக் குழுவையும் இப்போது அதிகாரவர்க்க பாதையாளர்கள் கைப்பற்றிவிட்டனர்.

தமிழகத்தை பொருத்தவரை சமூகத்தில் உள்ள ஆகப் பெரும்பான்மையான முன்னணியாளர்களை இந்த அமைப்பினர் தான் வென்றெடுத்துள்ளனர்.இப்போது இந்த முன்னணியாளர்களும் ஏறத்தாழ காயடிக்கப்பட்டுவிட்டனர்.இந்த காயடிப்பிலிருந்து தப்பித்தவர்களில் எமது குழுவும் ஒன்றாகும், எங்களை போன்றே மேலும் பலர் அங்கு இருப்பார்கள் என்பது நிச்சயம்.அவர்கள் அதிகாரவர்க்க பாதையாளர்களுக்கு எதிராக எம்மோடு அவர்கள் இணைவார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.
இந்திய கம்யூனிச இயக்க வரலாற்றை பார்க்கும் போது சலிப்பும்,அவநம்பிக்கையுமே பலருக்கும் தோன்றினாலும், இவைகள் இதற்கு தீர்வாகாது,இந்த சலிப்பும், அவநம்பிக்கையும் அதிகாரவர்க்க பாதையாளர்களுக்கும்,போலி கம்யூனிசவாதிகளுக்கும் சாதகமாகவே அமைந்துவிடும்.ஆகவே இவர்களுக்கு எதிராக போராடி உண்மையான கம்யூனிச கட்சியை கட்டுவதுதான் ஒரே மாற்றுவழியாகும்.தமிழகத்தை பொருத்தவரை, ஒரே புரட்சிகர குழுவாக இருந்த வினவும் அதன் தோழமைகளும் அதிகாரவர்க்க பாதையாளர்களாக சீரழிந்துவிட்டாலும், இன்னமும் இந்தியாவில் உண்மையான புரட்சிகர அமைப்புகளும்,குழுக்களும் இருக்கவே செய்கின்றன.இவர்களிடம் சில பலவீனங்கள் இருந்தாலும்,அவைகள் அந்த அமைப்புகளை புரட்சிகர சக்திகளாக இல்லாமல் செய்துவிடும் அளவிற்கு பலம் வாய்ந்த காரணிகள் இல்லை என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.அப்படிப் பட்ட புரட்சிகர சக்திகளோடு ஐக்கியப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.ஆகவே முழு முற்றாக நம்பிக்கை இழப்பதற்கான சூழலோ அவசியமோ ஏதுமில்லை.

மக்கள் மத்தியில் நமது மாபெரும் ஆசான்களின் வழிகாட்டுதலின் படி களப்பணியாற்றுவதும் அதே நேரத்தில் தமிழகத்தில் மிகக்குறைந்த அளவிலேயே உள்ள சமூக அக்கறையுள்ள முன்னணியாளர்களை, அதிகார வர்க்க பாதையாளர்களாக சீரழிந்து விட்ட, மேற்கண்ட அமைப்பினரின் கைகளில் சிக்கி காயடிக்கப்படுவதை தடுப்பதும் எமது அவசர,அவசிய பணியாகும்.ஏனேன்றால் சமூக அக்கறையுள்ள முன்னணியாளர்கள் இல்லாமல் புரட்சிக்கு மக்களை அணி திரட்டுவது என்பது ஒரு போதும் சாத்தியமில்லை.ஆகவே எமது இந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த பணிக்கு, சமூகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள்,சமூக மாற்றத்தை விரும்புவோர்,புரட்சியை நேசிப்போர் ஆகிய அனைவரும் ஆதரவும், ஒத்துழைப்பும் நல்குமாறும் எம்மோடு இணைந்து பணியாற்ற முன் வருமாறும் தோழமையுடன் கோருகிறோம்.

                           தோழமையுடன்
                     சூறாவளி நிர்வாகக் குழு.


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post