சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தேவையா? இல்லையா?

பொதுவுடைமை pothuvudaimai@googlegroups.com யில் தோழர் அக்னி இறகு எழுதியது :


சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தேவையா? இல்லையா? என்ற கேள்விக்கு விடை தேட, அதைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்வது அவசியமாகிறது. அதற்கு ஒரு நாட்டின் வளர்ச்சியை எப்படி எடைபோட நினைக்கின்றோம் என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம்.

பொருள் உற்பத்தி அதிகமாவது மட்டும் ஒரு நாட்டிற்குப் போதுமா? அது சமமாக அல்லது சமூகநீதி அடிப்படையில் பங்கிடப்படுவது அதைவிட முக்கியமல்லவா?

உதாரணமாக,

மின்சாரம் தயாரிக்க அணுசக்தி அவசியமானது எனக் கூறும்போது, அணுசக்தியால் கிடைக்கும் மின்சாரம் யாருக்கு அதிகம் கிடைக்கிறது; யாருக்குக் கிடைக்கவில்லை என்பதையும் இணைத்தே சிந்திப்பது நல்லதல்லவா? சாதாரண, ஏழை மக்களுக்குப் பயன்படும் வகையில் ஒரு திட்டம் அமையுமானால் (அந்த மின்சாரம் சேர்ந்தடைந்தால்) அதை வரவேற்பது நல்லதுதான்.

சுகாதாரத்தில் சமீபத்தில் இந்திய புள்ளி விவரங்களைப் பாருங்கள்.

1. பேறு காலத்தில் இரத்தசோகை (Anemia) யால் பாதிக்கப்படும் பெண்கள் அதிகம் இருக்கும் நாடு இந்தியா (88% விழுக்காடு).

2. ஐந்து வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளில் 80% பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 46% பேர் சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் (எத்தியோபியா, சோமாளியாவில் கூட இது 36%தான்.)

3. பெரியவர்களிடத்தும் சத்துக்குறைவு பாதிப்பு 40%_ல் உள்ளது.

4. மூன்று வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளில் 50% பேர் சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். (இதைச் சொல்லும் பத்திரிகைகள் அது அடித்தட்டு / தாழ்த்தப்பட்ட சாதி மக்களிடம்தான் அதிகம் இருப்பதைச் சொல்லாமல் விடுவது எதனால்?)

5. இந்தியாவில் 77% மக்கள் நாள் ஒன்றுக்கு ரூ.20 மட்டுமே கூலியாகப் பெறுகின்றனர். அதில் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர்தான் அதிகம்.

அவர்கள் அப்படியே இருக்கட்டும். மீதமுள்ள மக்கள் பயனடைந்தால் சரிதான் எனும் போக்கை சரியான திசையிலான வளர்ச்சிதான் என்பதை ஏற்றுக் கொள்ளலாமா? வேண்டாமா? என்பதுதான் முக்கியம். என்னைப் பொறுத்தவரை பெரும்பாலானோர் குறிப்பாக பெண்கள் / சிறு குழந்தைகள் _ அதிலும் அடித்தட்டு / தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் வறுமையால் வாடுகையில் 'சத்துக் குறைவு' எனும் வார்த்தை 'வறுமை'யை மறைக்க எவ்வாறெல்லாம் உதவுகிறது. நாடு சரியான வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என ஒப்புக் கொள்ள முடியாது. ஆக,

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தேவையா? இல்லையா? என்பதைவிட அவை யாருக்கு அதிக நன்மை பயக்கிறது என்பது முக்கியம். அவை சாதாரண ஏழை மக்களுக்கு குறிப்பாக அடித்தட்டு/ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிகப் பயனைக் கொடுத்து அவர்களை தற்சார்பு நிலைக்குக் கொண்டு சென்றால் அதை ஆதரிப்பது தவறில்லை.

மேலும், விளைநிலங்கள் கைப்பற்றப்படுவது சரியா/தவறா என்பதைவிட, நில உச்சவரம்பு சட்டம் மூலம் உபரியாக இருக்கும் விளை நிலங்கள் கைப்பற்றப்பட்டு சாதாரண மக்கள் பயனுறும் வகையில் அவற்றை பயன்படுத்துவதும் தவறில்லை.

இந்திய / தமிழக சூழலில் வறுமை எனப்படும் 'சத்துக் குறைவால்' வாடும் மக்களுக்கு அவை அதிக பயனளிக்குமாறு மாற்றுத்திட்டத்தை முன் வைத்துச் செயல்படுத்த முடியும். மேலும், வணிக நலன்களை அதிகம் கட்டிக்காக்கும் சுயÊ உதவிக் குழுக்களுக்குப் பதிலாக சுயசார்பை உயர்த்திப் பிடிக்கும் சுயஉதவிக் குழுக்களை வளர்த்தெடுக்கலாம்.

தேவையை ஒட்டி, ஒவ்வொரு தெரு, சுயஉதவிக் குழுக்கள், வார்டு, சிறு கிராமம், பெரிய கிராமம், வட்டம், மாவட்டந்தோறும் இவைகளுக்கு அங்கு வாழும் மக்களின் சுகாதாரத்திற்கு ஏற்ப சிறு/ பெரு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட வேண்டும். அங்கு சத்துக் குறைவால் பாதிக்கப்படும் மக்களைப் பட்டியலிட்டு அது அனைவரது பார்வைக்கும் படும்படி பொது இடங்களில் வைக்கப்பட வேண்டும்.

எங்கெல்லாம் விளைநிலங்கள் உள்ளனவோ, அங்கெல்லாம் சமூக வேளாண்மைக் கூடங்கள் (Community Agricultural Farms for Exploited, CAFE) உருவாக்கப்பட வேண்டும். சத்துக் குறைவைப் போக்க பணப் பயிர்களுக்கு பதிலாக, ஊட்டச்சத்து நிறைந்த தேவையான உணவுப் பொருட்களான (தானியங்கள் / பயறு வகைகள்/ காய்கறிகளை... உற்பத்தி செய்யவேண்டும். சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதில் வேலையும், உரிய கூலிக்கான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும். முடிந்தவரை இயற்கை வேளாண்முறையையே பின்பற்ற வேண்டும்.

விளைந்த பொருட்கள் முதலில் சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். தேவையெனில் அதற்கென தனிச் சட்டம் கொண்டு வரலாம். உபரியாக இருக்கும் பொருட்களின் மீதியை மட்டும் சந்தைக்குக் கொண்டு சென்று அதனால் கிடைக்கும் பணத்தை அரசுக்கு ஒரு பகுதியும், ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களின் சமூக சொத்தாகவும் பாதுகாக்கப்பட வேண்டும்.

மாதம் ஒரு முறையாவது சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களிடத்து ஏற்படும் மாற்றம்/முன்னேற்றம் பதிவு செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வைக்குப் படும்படி வைக்கப்பட வேண்டும்.

விளைநிலங்கள் அல்லாத பிற நிலங்களிலும், அந்தந்த இடத்தின் சூழலுக்கு ஏற்ப அவற்றைச் செயல்படுத்த வேண்டும். அத்தொழிற்கூடங்களிலும்கூட வேலை முன்னுரிமை அடிப்படையில் சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் நியமிக்கப்பட வேண்டும். நிரந்தர வேலை மற்றும் உரிய கூலி... போன்றவற்றை நடைமுறைப் படுத்தி, ஏழை மக்களுக்கான சமூகப் பாதுகாப்பினை உறுதி செய்தல் வேண்டும். இவற்றை நடைமுறைப்படுத்த உள்ளூர் சமூக அமைப்புகளும், அரசு அதிகாரிகளும் கொண்ட குழு உள்ளூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

சத்துக்குறைவு என்பது தேசிய மாநில, அளவில் சட்டரீதியான குற்றமாகக் கருதப்பட்டு ஒவ்வொரு நபர்/குடும்ப அளவில் அதற்கான விரிவான காரணங்கள், மற்றும் அதைப் போக்கவல்ல நடைமுறைச் செயல்பாடுகள் எழுத்து வடிவில் எழுதப்படவேண்டும். அவர்கள் சத்துக்குறைவில் இருந்து மீளும் வரை தொடர் கண்காணிப்புகளுக்கு உட்படுத்தப்பட்டு, மீண்ட பின் ஏற்பட்ட சிக்கல், சிரமங்கள், இலாபநட்ட அனுபவங்களைத் தொகுத்து அவற்றை மேலும் செழுமைப்படுத்தத் தேவையான திட்டங்கள், உத்திகள், நடைமுறைச் செயல்பாடுகள் உருவாக்கப்பட வேண்டும். அதில் தனிமனித செயல்பாடுகள்/சுயசார்பு, உள்ளூர் மக்களின் தேவைகளுக்கே அதிக முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

வறுமைக்கான (சத்துக்குறைவிற்கான) சரியான காரணங்கள் முறையாக விளக்கப்படவும், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஏற்படும் சிரமங்களை எடுத்துரைக்க உரிய இடைவேளையில் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக இலவசமாக சத்துணவு வழங்குவது சட்டரீதியாக கட்டாயப்படுத்தப்பட்டு, மேற்படி செயல்பாடுகளைச் செய்யாமல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு உரிய கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

கொள்ளை இலாபம் ஒன்றையே குறியாக வைத்துச் செயல்படும் பெரு நிறுவனங்கள்/ தொழிற்கூடங்களுக்குப் பதிலாக, சமூக அக்கறையுடன் செயல்படும் வணிக நிறுவனங்களை உருவாக்க வேண்டும். சுருக்கமாக, தற்போது நடைமுறையில் உள்ள தொழிலாளர்/மனித நலன்/உரிமைகளை மீறும், சுற்றுசூழல் சுத்தத்தை உதாசீனப்படுத்தும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு பதில் சாதாரண ஏழை மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தி, வறுமையைப் போக்கி, அவர்களுக்குச் சத்தான உணவு, சுத்தமான நீர், அடிப்படை வசதிகள் (வீடு, உடை...) உறுதி செய்யப்படுதல், சுற்றுச்சூழலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் மாசு படாமல் காத்தல், வேலைக்கு உத்தரவாதம், மன அமைதி, சுரண்டலற்ற மனித உறவுகள்... இவற்றை ஏற்படுத்தி, நாட்டின் வளர்ச்சியையும் உறுதி செய்யும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தேவை என சந்தேகமின்றி தெளிவாகக் கூறலாம்

--
வலைப்பூ(BLOG) : http://agnisiraku.blogspot.com/
http://pothuvudaimai.blogspot.com/
நா.பிரதாப் குமார்.

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post