123 இந்திய எதிரி

இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்கக் கப்பல் கொச்சித் துறைமுகம் வந்து சேர்ந்தது. அந்தக் கப்பலில் அமெரிக்கா நமக்கு பரிசுப்பொருட்களை அனுப்பியிருந்தது. துறைமுகப் பணியாளர்கள் திறந்து பார்த்தனர். துர்நாற்றத்தால் அவர்கள் மயங்கி விழும் நிலை ஏற்பட்டது.

தனியார் நிறுவனத்தின் பெயரால் வந்த வாசனைத் திரவியம் என்ன தெரியுமா? நியூயார்க் நகர ஓர்ஆண்டுக் குப்பைகள். அமெரிக்க மருத்துவமனைகளின் அபாயகரமான கழிவுகள். அவற்றை நமது கடலில் கொட்டுவதற்குத்தான் அந்தக் கப்பல் வந்தது. கேரள அரசு எடுத்த துரித நடவடிக்கையின் காரணமாக அந்தக் கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது. ஆமாம். இந்தியாவை அமெரிக்கா தனது குப்பைத் தொட்டியாகக் கருதுகிறதா?

'போனால் வராது. பொழுது போனால் கிடைக்காது' என்று இப்போது அமெரிக்காவிலிருந்து அரசியல் விற்பன்னர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தொழிலதிபர்கள் மட்டுமல்ல, வியாபாரிகளும் கூட.

அவர்கள் எதற்காக அலை மோதி வருகிறார்கள்? 'அய்யா, சாமி... எப்படியாவது அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டை ஏற்றுக் கொள்ளுங்கள்' என்று மன்றாடுவதற்காக வருகிறார்கள். ஆரம்பத்தில் அமெரிக்காவாழ் இந்திய வம்சாவளித் தொழிலதிபர்கள் வந்தனர். அடுத்து, அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் கிசிங்கர் வந்தார். அமெரிக்க நிதி அமைச்சர் பால்சன் வந்தார். இன்னும் பல குடுகுடுப்பைக்காரர்கள் வர இருக்கிறார்கள்.

இப்படி வருகிறவர்களெல்லாம் எங்கே போகிறார்கள்? பி.ஜே.பி. தலைவர் அத்வானி இல்லம் செல்கிறார்கள். ராஜ்நாத் சிங்கைச் சந்திக்கின்றனர். 'அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டை எதிர்க்காதீர்கள். ஆதரவு தாருங்கள்' என்று மணிக்கணக்கில் வாதம் செய்கிறார்கள்.

'உடன்பாட்டின் பல அம்சங்கள் இந்திய நலனுக்கு எதிரானவை. அவற்றை நீக்குங்கள்' என்று பி.ஜே.பி. தலைவர்கள் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். ஆனால் நீக்கமாட்டார்கள். அந்த அம்சங்களும் நிபந்தனைகளும் இந்தியாவை அமெரிக்காவின் துணை கிரகமாக்கும் சூத்திரக் கயிறுகளாகும்.

பாவம், டெல்லியிலுள்ள அமெரிக்கத் தூதர் முல்போர்டு இன்னும் பி.ஜே.பி. கவுன்சிலர்களைத்தான் சந்திக்கவில்லை.

இந்த வாரம் நமது வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கண்டலிசா ரைசுடன் தொடர்பு கொண்டார். 'உடன்பாட்டில் இந்தியாவிற்குப் பாதகமான அம்சங்கள் இருப்பதாக அச்சம் நிலவுகிறது. ஆகவே, உடன்பாட்டை மறுபரிசீலனை செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு அந்த அம்மையார் மறுத்து விட்டார். 'மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்ட உடன்பாட்டில் இனி எந்த மாற்றமும் இல்லை' என்று அவர் தெளிவாகத் தெரிவித்து விட்டார்.

எப்படியும் அந்த உடன்பாட்டை இந்தியாவின் தலையில் இறக்கி வைப்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. அமெரிக்க அரசும் சரி, தனியார் நிறுவனங்களும் சரி, தற்போது தங்கள் நாட்டில் அணுமின் உலைகளை நிறுவுவதில்லை. நியூயார்க் அருகே லாங் ஐலண்டில் அமெரிக்கா அணுமின் உலைகளை நிறுவ முயன்றது. ஆபத்து வாசலுக்கு வருகிறது என்பதனை அறிந்த நியூயார்க் மக்கள், அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இப்போது அந்தத் திட்டம் அரை குறையாக அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை அமெரிக்கா 90 அணு உலைகளை மூடியிருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் புதிதாக அணுஉலை தொடங்கப்படவில்லை.

இருக்கவே இருக்கிறது இந்திய குப்பைத் தொட்டி என்று, இப்போது அமெரிக்க மக்கள் புறக்கணிக்கும் அணுமின் உலைகளை இங்கே நிறுவ விரும்புகிறார்கள். அதற்கு மன்மோகன் சிங் வழி வகுத்து விட்டார்.

இப்போது அமெரிக்காவில் அணுமின் உலைகளின் உற்பத்தி பெரிதும் பாதித்திருக்கிறது. அதிலிருந்து மீள்வது மட்டும் அதன் நோக்கம் அல்ல. இன்னும் பல ஆழமான அரசியல் காரணங்கள் உண்டு.

ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக எரிவாயு வாங்க, பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த மணிசங்கர் அய்யர் முயன்றார். அதனை அமெரிக்கா அன்றும் எதிர்த்தது. இன்றும் எதிர்க்கிறது. அமெரிக்க நிர்ப்பந்தத்தின் காரணமாக மணிசங்கர் அய்யர் பெட்ரோலியத் துறையை இழந்தார். ஆனாலும் ஈரான் எரிவாயுத் திட்டம் இன்னும் மரித்துவிடவில்லை. அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தாதே என்று இந்த வாரம் கூட அமெரிக்கா நம்மை எச்சரித்திருக்கிறது. ஏனெனில், எரிவாயு மூலம் மின் உற்பத்தி செய்வது மலிவு. அணுமின் உலைகள் மூலம் மின் உற்பத்தி செய்வது அதிகச் செலவாகும். எனவே, ஈரான் எரிவாயுத் திட்டத்தை முடக்கும் நோக்குடன் அமெரிக்கா அணுசக்தி உடன்பாட்டைத் துரிதப்படுத்துகிறது. ஈரானுக்கு எதிராக இந்தியாவை நிறுத்த முயல்கிறது.

இன்னொரு பக்கம் நமது அணுமின் உற்பத்தித்துறை விஞ்ஞானிகள் ஓசையின்றி அற்புதமான சாதனை செய்து வருகிறார்கள். இந்தியா அணுகுண்டு சோதனை செய்த போது, அமெரிக்கா நமக்கு யுரேனியம் விற்பதை நிறுத்தியது. உடனே நமது விஞ்ஞானிகள் தோரியத்தைப் பயன்படுத்தி அணுமின் உற்பத்தியைத் தொடர்ந்தனர். கல்பாக்கம் அணுமின் நிலையம்கூட தோரியத்தால் இயங்கியது. இதனைக் கண்ணுற்ற பிரெஞ்சு விஞ்ஞானி 'அணுமின் உற்பத்தியில் புதிய புரட்சி' என்று பாராட்டினார். உண்மைதான்.

வேறு எந்த நாடும் தோரியத்தைப் பயன்படுத்தி இதுவரை அணுமின் உற்பத்தி செய்யவில்லை. இந்தியாதான் அந்தச் சாதனையைச் செய்தது. 'இப்போது நமது அணுசக்தித் துறை விஞ்ஞானிகள் அந்த ஆராய்ச்சியில் வெகு தூரம் முன்னேறியிருக்கிறார்கள். நற்பலன்களை அளிக்கும் அந்த ஆராய்ச்சி முழு வெற்றி பெறும்போது இன்னும் ஏழு ஆண்டுகளில் மின் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றுவிடும்' என்று நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறுகிறார். இப்படி இங்கேயே கற்பகத் தரு வளர வாய்ப்பு இருக்கும் போது, அமெரிக்க எட்டி மரம் நமக்கு எதற்கு?

ஆனால், தோரியத்தைப் பயன்படுத்தி அணுமின் உற்பத்தி செய்யும் இந்தியத் திட்டத்தை அமெரிக்கா முடக்க முயற்சிக்கிறது.

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஏதோ நமக்கு மின்சாரம் உற்பத்தி செய்து தருகிற திட்டம் என்றுதான் வெளித்தோற்றத்திற்குத் தெரியும். ஆனால், அந்த ஒப்பந்தம் இந்தியாவை அமெரிக்க ராணுவக் கூட்டணிக்குள் சுண்டியிழுக்கின்ற சூட்சுமக் கயிறாகும். அதனால்தான் அதனை நாட்டுப்பற்றுள்ளவர்கள் எதிர்க்கிறார்கள். இந்திய விஞ்ஞானிகள் எதிர்க்கிறார்கள்.

'தோரியத்தை அடிப்படையாகக் கொண்ட அணுமின் உலைகளை நம்மால் அதிகபட்சம் ஏழு ஆண்டுகளில் நிறுவ முடியும்' என்கிறார் அப்துல் கலாம். ஆனால், அந்தத் திசையில் இதுவரை மைய அரசு சிந்திக்கவேயில்லை. என்றைக்கு மன்மோகன் சிங் அரசு பதவி ஏற்றதோ, அந்த நாளிலிருந்து அமெரிக்க அணு உலைகளைத்தான் பாராயணம் செய்து கொண்டிருக்கிறது. சொந்தக் கால்களில் நிற்க நமக்கு வல்லமை இருக்கும்போது, அமெரிக்கா தரும் ரப்பர் கால்களில் நாம் ஏன் நிற்க வேண்டும்?

அடுத்தகட்டமாக அணுசக்தி உடன்பாட்டை ஏற்கிறாயா இல்லையா என்று அமெரிக்கா நம்மை மிரட்டும். ஏதோ அந்த நாட்டின் வழித்தடத்தில் நாம் பயணம் செய்யப் பாத்தியப்பட்டிருக்கிறோம் என்ற தோற்றத்தை மைய அரசே ஏற்படுத்தி விட்டது.

'ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம் பெற வேண்டுமானால், அமெரிக்க ஒப்பந்தத்தைச் செயல்படுத்த வேண்டும்' என்று கிசிங்கர் சொல்கிறார். ஒப்பந்தம் கைவிடப்பட்டால் நம்பகத்தன்மையே போய்விடும் என்று சிலர் கிசுகிசு பிரசாரம் செய்கிறார்கள். உறுதிமொழியைக் காப்பாற்றாத பிரதமர் என்று மன்மோகன் மீது பழிச் சொல் வரும் என்கிறார்கள்.

நடந்து போன தவறைத் திருத்திக் கொள்ள மைய அரசும் முயற்சிக்கிறது. அதனால்தான் உடன்பாட்டில் சில மாறுதல்களைக் கோருகிறார் பிரணாப் முகர்ஜி.

'அணுசக்தி உடன்பாட்டோடு பயணம் முடிவதில்லை' என்று பிரதமர் மன்மோகன் சிங்கும் பெருந்தன்மையோடு கூறியிருக்கிறார். நல்லது. அமெரிக்கா நமக்கு மாட்டியிருக்கும் கறுப்புக் குல்லாவைக் கழற்றி எறிய வேண்டும்.

--
வலைப்பூ(BLOG) : http://agnisiraku.blogspot.com/
http://pothuvudaimai.blogspot.com/
நா.பிரதாப் குமார்.

--
தியாகு

-
மாறுதல் என்ற வார்த்தையை தவிர அனைத்தும்
மாற்றத்துக்கு உட்பட்டவை -மார்க்ஸ்

8 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post